ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம்

0
2256

கோடக நல்லூர் என்னும் அழகிய கிராமம், திருநெல்வேலி மாவட்டத்தில், தாம்பரபரணி என்னும் நநிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு சிவன் கோவில்களும், ஒரு பெருமாள் கோவிலும் மேலும் நங்கையார் அம்மன் என்னும் காவல் தெய்வமும் உள்ளது. இதில் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயம் சுமார் 900 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஆலயம். இங்குள்ள சிவலிங்கம் மேற்கு திசையை நோக்கி இருப்பது விசேஷம். சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி சுமார் 1900-ல் அங்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை “தட்ஷண சிருங்கோ” என்று வர்ணித்தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும். கோடக நல்லூரில் வாழ்ந்த ஸ்ரீ சுந்தரசுவாமிகள் இந்தக் கோவிலில் 7 தினங்களுக்கு “சூத சம்ஹிதை” என்னும் சிவசரித்திரத்தை பலதடவைகள் பிரசங்கம் செய்ததாகவும் தெரியவருகிறது.

abikukk1

அர்த்தநாரீஸ்வரர் இந்தக் கோவிலில் உள்ள சிறப்பு அம்சமாகும். பல இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஆனால் கோடகநல்லூர் சௌந்தர்ய நாயகி சமேத ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் ஆலயத்தில், உட்கார்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு விசேஷமாகும். இப்படி உட்கார்ந்த அர்த்தநாரீஸ்வரரின் நிலையானது ஸ்ரீ தட்சினாமூர்த்தி திருக்கோலமாக காட்சியளிக்கிறது.

abimukthees2

மேலும், கோவில் வெளிச்சுற்று ப்ரகாரத்தில் ஸ்ரீ அபிமுக்தீஸ்வரர் மூலஸ்தானத்தின் வெளிப்புற சுவரில், வடக்குப் பாகத்தில், இரண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று வாலி சிவனுக்கு பூஜை செய்வதாகவும், மற்றொன்று, கண்ணப்ப நாயனார். தனது இரண்டாவது கண்ணை அம்பினால் எடுப்பதாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சிற்பங்கள் திருச்சிக்கு அருகில் உள்ள வாலிகண்ட புரத்திலுள்ள சிவன் கோவிலிலும் காணப்படுகிறது.